லண்டன்,
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்ட பண்ட் – ராகுல் ஜோடி பொறுமையாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய பண்ட் தனது ஸ்டைலில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் கே.எல்.ராகுல் சதத்தை நோக்கி முன்னேறினார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய இந்த ஜோடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ரிஷப் பண்ட் 74 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடி பென் ஸ்டோக்சால் அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார்.
தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. இந்திய அணி 65.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் அடித்து நல்ல நிலையில் உள்ளது. கே.எல். ராகுல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி இன்னும் 139 ரன்கள் மட்டுமே பின்னிலையில் உள்ளது.