புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி 47 இடங்களில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை ஆகிய இந்தியாவின் இரண்டு வரம்பற்ற பலத்தை உலகம் ஒப்புக் கொள்கிறது. சமீபத்தில் நான் 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். ஒவ்வொரு நாட்டிலும் நம் இளைஞர் சக்தியை புகழ்ந்து பேசுவதை நான் உணர்ந்தேன். இந்த ஆற்றலை பயன்படுத்தியதற்குக் காரணம் மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள்தான்.
நம் நாட்டில் சமத்துவமின்மை வேகமாகக் குறைந்து வருகிறது. நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 90 கோடிக்கும் மேற்பட்டோர் மக்கள் நலத் திட்டங்களால் பயன் அடைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) சமீபத்தில் கூறியிருந்ததை நினைவுகூர்கிறேன். இந்த திட்டங்கள் மக்களுக்கு சமூக பாதுகாப்பை மட்டும் வழங்கவில்லை, வேலை வாய்ப்பையும் உருவாக்கி உள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.