“விஜய் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” – எல்.முருகன் 

கோவை: “விஜய் தற்போது வெளியில் வந்து மூன்று நிமிடங்கள் பேசியுள்ளார். அவரது நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான எல்.முருகன் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வரைச் சுற்றியுள்ள நபர்களின் ஆட்சி ராஜ்ஜியம் தான் தமிழகத்தில் நடக்கிறது. டாஸ்மாக், மணல் கொள்ளை, பத்திரப் பதிவு, கனிம வளம் என அவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

சமூக நீதி விடுதிகள் என பதிவிடும் முதல்வர், இதுவரை எந்த விடுதியையும் நேரில் சென்று பார்வையிடவில்லை. தமிழகத்தில் பல்வேறு குறைபாடுகளுடன் சமூக நல விடுதிகள் இயங்கி வருகின்றன. தவெக தலைவர் விஜய் தற்போது வெளியில் வந்து மூன்று நிமிடங்கள் பேசியுள்ளார். அவரது நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், திமுக கூட்டணி விரைவில் உடைந்து விடும்.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் முழுமையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக அரசு பெறப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.