மும்பை: சங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரின் பெயர், ஈஷ்வர்பூர் என மாற்றப்படவுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மாநில உணவு மற்றும் சிவில் விநியோகத்துறை அமைச்சர் சகன் புஜ்பால் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு மாநில அரசு அனுப்பும் என்றும் அவர் கூறினார்.
இந்துத்துவ அமைப்பான ஷிவ் பிரதிஸ்தான், இஸ்லாம்பூரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்றக் கோரி சாங்லி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. இஸ்லாம்பூர் பெயர் மாற்றத்திற்கான கோரிக்கை 1986 முதல் நிலுவையில் உள்ளது என்று சிவசேனா வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.