ஆமதாபாத்,
குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் ஆமதாபாத்தில் பிரபல கேளிக்கை விடுதியில் முக்கிய புள்ளி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபோதை விருந்து சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. நள்ளிரவில் நடந்த மதுபோதை விருந்தில் சோதனை நடத்துவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.
அப்போது அங்கு விலையுயர்ந்த மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டதும், மதுபோதையில் இளம்பெண்கள் குத்தாட்டம் ஆடியதும் தெரிந்தது. உடனடியாக 26 இளம்பெண்கள் உள்பட 39 பேரை கையும், களவுமாக போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு மதுபான பாட்டில்கள், கஞ்சா குடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.