அகமதாபாத் விபத்திற்கு பிறகு அடிக்கடி விடுப்பில் செல்லும் 'ஏர் இந்தியா' விமானிகள்

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

மேலும், விபத்திற்குள்ளான விமானம் மெக்நானிநகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்தவர்கள் சிலர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 260 ஆக அதிகரித்தது. இந்திய வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், அகமதாபாத் விபத்திற்கு பிறகு ‘ஏர் இந்தியா’ விமானிகள் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;-

“ஏர் இந்தியா நிறுவனத்தின் AI-171 விமான விபத்திற்குப் பிறகு உடல்நலக்குறைவால் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்லும் விமானிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் 16-ந்தேதி மொத்தம் 112 விமானிகள் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.