2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் இந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 2025 ஆசிய தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி வெளியிட்டார்.
செப்டம்பரில் ஆசிய கோப்பை
அதன்படி 2025 ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தொடங்கி அம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடர் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. 2026ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், இத்தொடரை டி20. வடிவில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு இத்தொடர் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் என மொத்தம் 8 அணிகள் ப்ங்கேற்க உள்ளன. இத்தொடரை நடத்தும் உரிமையை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) பெற்றிருந்தாலும், இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது. பாகிஸ்தான் அணி பங்கேற்பதால், இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது. 2025 ஆசிய கோப்பை நடைபெறும் தேதி மற்றும் இடம் மட்டுமே உறுதியாகி உள்ளது. இன்னும் முழு அட்டவனை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி
கடந்த ஏப்ரல் மாதத்தில் பகல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாக இரு நாடுகளின் உறவு மேலும் பாதிக்கப்பட்டதால், ஆசிய கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மேலும் படிங்க: டெஸ்ட்டில் முதன்முறையாக.. பும்ரா செய்த மோசமான சாதனை.. முழு விவரம்!
மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுகிறாரா? அதிர்ச்சி தகவல்!