4-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்திய கேப்டன் சுப்மன் கில் அரைசதம்

மான்செஸ்டர்,

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியை விட 311 ரன்கள் அதிகமாகும். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 311 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் இருவரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த பந்துகளில் கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றி அசத்தினார். ஜெய்ஸ்வால் மற்றும் சுதர்சன் இருவரும் டக் அவுட் ஆகினர்.

இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் ஒரு ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் கைகோர்த்த கே.எல்.ராகுல் – சுப்மன் கில் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடி வருகிறது. இருவரும் நிதானமாகவும் அதே நேரத்தில் கூடுதல் கவனத்துடனும் பேட்டிங் செய்து வருகின்றனர். இவர்களில் சுப்மன் கில் அரைசதம் அடித்துள்ளார்.

தற்போது வரை இந்திய அணி 2-வது இன்னிங்சில் 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் 52 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.