நாகப்பட்டினம்: சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டு ஆட்சி செய்து வருகிறது.
வாக்காளர் பட்டியலை ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டத்தில் இல்லாத சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டுள்ளது.
அந்த மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒரே இடத்தில் 4,000 ஓட்டுகள் எப்படி வந்தன என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதுகுறித்த விவரங்களை தர முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது முட்டாள்தனமாக உள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. நமது நாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நடக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பிரதமர் மோடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதில் கூறவில்லை.
தற்போது பிஹாரில் நடக்கும் செயல், நாளை தமிழகத்திலும் நடக்கலாம்? மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் விரும்பியதை சட்டமாக நிறைவேற்றி வருகிறார்கள். இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்த பாஜக அரசு திட்டமிட்டு, இதுபோன்ற செயல்களை அரங்கேற்றி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று சொல்ல அனைத்துக் கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், திமுக கூட்டணிதான் பலமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.