புதுடெல்லி,
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது.
இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்ற்னர். காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். திமுக சார்பில் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியாக சென்ற எம்.பிக்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதைத்தொடர்ந்து எம்.பிக்களுடன் டெல்லி காவல்துறை பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
இதற்கிடையே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.