தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி கைது

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது.

இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்ற்னர். காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியாக சென்ற எம்.பிக்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதைத்தொடர்ந்து எம்.பிக்களுடன் டெல்லி காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில எம்.பி.க்கள் போலீசாரின் தடுப்புகளை தாண்டிக்குதித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், அகிலேஷ் யாதவ், சஞ்சய் ராவத், சாகரிகா கோஷ், கனிமொழி, ஜோதிமணி எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், திருச்சி சிவா, உள்ளிட்ட எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் பேருந்தில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுக்கு பின் பேருந்தில் இருந்தவாறு ராகுல் காந்தி கூறுகையில்,

“பாஜகவால் பேச முடியாது; எனென்றால் உண்மை நாட்டின் முன் உள்ளது. இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்குக்கானது. எங்களுக்கு தூய்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.