மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நாளை (19-ம் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர்.
இந்த அணியில் யார்-யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு தகவல்களும் வெளிவந்த வண்னம் உள்ளன.
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ‘ஆண்டர்சன் – தெண்டுல்கர்’ (இங்கிலாந்து டெஸ்ட் தொடர்) தொடரில் அசத்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடமில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அணியில் இடம்பெற சுப்மன் கில் – ஜெய்ஸ்வால் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இந்திய தேர்வுக்குழு ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா விளையாட உள்ளதால் சிராஜிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல 2-வது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.