தொழில்நுட்ப கோளாறு; கொச்சி-டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் புறப்பாடு ரத்து

கொச்சி,

கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏ.ஐ.504 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை டெல்லி நோக்கி புறப்பட தயாராக இருந்தது.

விமானம் மேலே எழும்ப தயாரானபோது, அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், விமானத்தின் புறப்பாட்டுக்கான நேரம் மாற்றப்பட்டது. விமானத்தில் உள்ள கோளாறை சரிசெய்வதற்காக அது தனியான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து, வேறு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் விமானம் புறப்படும் என விமான நிலையத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எர்ணாகுளம் தொகுதிக்கான எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிபி ஈடன், மற்ற பயணிகளுடன் இந்த விமானத்தில் பயணிப்பதற்காக தயாராக இருந்துள்ளார். அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், விமானம் ஓடுபாதையில் சென்றபோது சறுக்கியது போன்று உணர்ந்தேன். அது இன்னும் புறப்படவில்லை என தகவலை பகிர்ந்து உள்ளார்.

கடந்த 16-ந்தேதி மிலன் நகரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட பராமரிப்பு பணிக்கான குறைபாட்டால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

உயர் வெப்பநிலை கண்டறியப்பட்ட நிலையில், கடந்த 3-ந்தேதி புவனேஸ்வர் நகரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.