வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கெஜ்ரிவால்

புதுடெல்லி,

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகளின் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வரி விதிப்பால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று வழியை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக கூறியதாவது:

“வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பொருட்களுக்கான 11 சதவீத வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது உள்ளூர் வணிகத்தை கடுமையாக பாதிக்கும். பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அடிபணியவில்லை; அவர்கள் கூடுதல் வரியை விதித்துள்ளனர். எனவே நாமும் கூடுதல் வரியை விதிக்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தால், இந்தியா 100 சதவீத வரியை அமெரிக்காவிற்கு விதிக்க வேண்டும். மொத்த நாடும் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும். எந்தவொரு நாடும் இந்தியாவை புண்படுத்த முடியாது. 140 கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா” என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.