மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அந்த தொடரில் விளையாட உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்போது இந்தியாவிலிருந்து துபாய் புறப்படும்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணி செப்டம்பர் 4-ம் தேதி துபாய் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அனைத்து வீரர்களும் மும்பை வந்து ஒன்றாக செல்லாமல் அவர்களது சொந்த மாநிலங்களில் இருந்து நேரடியாக துபாய் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.