12வது ஆசியக் கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்றது.. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா ஆகியவை சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் சூப்பர்-4 சுற்று முடிவடைந்தது. சூப்பர்-4 சுற்று முடிவில் இந்தியா 2 வெற்றி, 1 டிரா என 7 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், தென்கொரியா 4 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. மலேசியா, சீனா தலா 3 புள்ளிகள் பெற்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா–தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இந்திய அணி தென்கொரியாவை வீழ்த்தி 4வது முறையாக ஆசியக் கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு 2003, 2007, 2017 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி இருந்தது.
இந்த தொடரிலும் இரு அணிகள் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2–2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனால் இந்த இறுதிப்போட்டி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்த்தது போலவே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 4–1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. ஆசியக் கோப்பையை இந்தியா வெல்வது இது 4வது முறையாகும். இந்தியா தரப்பில் தில்பிரீத் சிங் 2 கோல்களும், சுக்ஜீத் சிங் மற்றும் அமித் ரோகிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். தென் கொரியா தரப்பில் சன் டைன் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது.