லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்திரா ராவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் மாயமானார். வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி திரும்பி வராததால், சிறுமியின் குடும்பத்தினர் பதற்றமடைந்து அக்கம்பக்கம் முழுவதும் தீவிரமாக தேடி அலைந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு கிணற்றில், சிறுமியின் சடலம் மிதந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை கொலை செய்தவர்கள் அவரது உடலை சாக்குப் பைக்குள் திணித்து கிணற்றுக்குள் வீசியிருந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் மற்றும் 17 வயது சிறுவனை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், 17 வயது சிறுவனுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அந்த பெண்ணின் கணவரும், மாமியாரும் வெளியூறுக்கு சென்றிருந்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அந்த பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற சிறுமி, இருவரும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண், இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமி தனது தந்தையிடம் இது பற்றி சொல்லப்போவதாக கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை சாக்கு மூட்டையில் திணித்து கிணற்றுக்குள் வீசியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.