சிக்பள்ளாப்பூர்,
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே நகரசபைக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பாபாஜான் (வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். அதுபோல் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்தவர் ரமிஜாபி (25). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனால் பாபாஜான், ரமிஜாபி இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் உண்டானது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இதுபற்றி இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால், அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்தனர். இதையடுத்து பாபாஜான், மனைவி- பிள்ளைகளை விட்டும், ரமிஜாபி தனது கணவர், குழந்தைகளை விட்டும் பிரிந்து குடிபண்டே டவுனில் ஒரு வீட்டில் கணவன்-மனைவியாக வசித்து வந்தனர். இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் இருவரும் ஒன்றாக அமர்ந்து அடிக்கடி மதுகுடித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலையும் ரமிஜாபி, பாபாஜான் ஆகியோர் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். இதில் ரமிஜாபிக்கு போதை தலைக்கேறியுள்ளது. அப்போது மேலும் மது கேட்டு பாபாஜானிடம் அடம்பிடித்துள்ளார். ஆனால் அவர் மது கொடுக்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக 2 பேரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டானது.
இதில் ஆத்திரமடைந்த பாபாஜான், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ரமிஜாபியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரமிஜாபி துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் குடிபண்டே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் மேலும் மதுபானம் கேட்டு தகராறு செய்ததால், ரமிஜாபியை, பாபாஜான் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ரமிஜாபி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாபாஜானை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.