புதுடெல்லி,
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதன்படி, பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. அப்போது அங்கு வசிப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனால் தேர்தல் ஆணையம் NRC-யை மறைமுகமாக அமல்படுத்த பாஜக, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மேலும் பலரது வாக்குகள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கடுமையாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆதார்டு கார்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர். முன்னதாக 32,03,370 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 32,91,478 அதரித்துள்ளனர்.
பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நவடா மாவட்டத்தில் 30,491 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம். தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 5ஆம் தேதி பீகார் சென்று தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆராய உள்ளது. அதன்பின் பீகார் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.