புதுடெல்லி: நாட்டில் முதல் முறையாக அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ரூ.6,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் நுமலிகர் என்ற இடத்திலிருந்து கோஹ்பூர் வரை, பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்டம் ரூ.6,000 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது. இது ஆற்றுக்கு கீழே அமைக்கப்படும் நாட்டின் முதல் சுரங்கப்பாதை திட்டமாகும். சீன எல்லை அருகே அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை 33.7 கி.மீ நீளத்துக்கும், பிரம்மபுத்திர நதியின் கீழ் 32 மீட்டர் ஆழத்திலும் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் நிறைவு பெற 5 ஆண்டு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயார் நிலையில் இருக்கும் இந்த சுரங்கப்பாதை திட்டம் மத்திய அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர் தலைமையிலான கட்டமைப்புக்கான அமைச்சரவை குழு இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் பிரம்மபுத்திரா நதிக்கு கீழ் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டப்படும். இந்த சுரங்கப்பாதையை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (என்எச்ஐடசிஎல்) அமைக்கவுள்ளது. இத்திட்டத்துக்கு வனவிலங்கு வாழ்வு நிலைக்குழுவுக்கான தேசிய வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சுரங்கப்பாதை திட்டத்தால், மண்ணின் நிலைத்தன்மை, நிலத்தடி நீர் ஓட்டம், படிம அமைப்பு முறை போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பு குறித்த அறிவியல் மதிப்பீட்டையும் அது கேட்டுள்ளது.
இந்தச் சுரங்கப்பாதை திட்டத்துக்கான அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப குழுவின் ஆய்வுகளுக்குப்பின் தயார் செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பிரம்மபுத்திரா நதியின் கீழ் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஏற்கெனவே அளித்த பேட்டியில், ‘‘ஆற்றுக்கு மேல் பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஆற்றுக்கு கீழ் நாம் ஏன் சுரங்கப்பாதை அமைக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது? ஜம்மு காஷ்மீரில் மலைக்கு கீழே அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரம்மபுத்திர நதிக்கு கீழே நம்மால் சுரங்கப் பாதை அமைக்க முடியுமா என நான் எண்ணினேன். தற்போது அதற்கான திட்ட அறிக்கை தயார்’’ என்றார்.