புதுடெல்லி: மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை பாலாபிஷேகம் செய்து கணவர் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் பிராடர் டி.கே. பிராடருக்கு அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்திலிருந்து அவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து வீட்டுக்கு வந்த அவருக்கு தாய், பாலால் அபிஷேகம் செய்தார்.
இதுகுறித்து பிராடர் டி.கே. தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “விவாகரத்து கிடைத்து விட்டது. நான் இப்போது தனியாக(சிங்கிள்) இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியான விவாகரத்து. 120 கிராம் தங்கம், 18 லட்சம் ரொக்கம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ இல்லை.
இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். எனது உலகம். எனது விதிகள். தனியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்றார். கடந்த மாதம் 25-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை அந்த வீடியோவுக்கு 62 ஆயிரம் லைக்குகள் வந்துள்ளன. 4 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவைப் பார்த்துள்ளனர்.