கோழிக்கோடு: கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம் நடத்தும் பால் பண்ணைக்கு சென்று பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். (ஆலியா பட் என்ற பசுவையும் சந்தித்தேன்!! திருமதி ஆலியா பட் மன்னிக்க வேண்டும். என்றாலும் அது ஒரு அழகான பசு)” என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா பட்-ஐ டேக் செய்து இதனை பதிவிட்ட பிரியங்கா தனது பயணத்தின் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
அதில் “துரதிருஷ்டவசமாக, பால் பண்ணை விவசாயிகள் பல சிரமங்களுடன் போராடி வருகின்றனர். கால்நடை மருந்துகளின் விலை அதிகரிப்பு, போதுமான காப்பீட்டுத் தொகை இல்லாதது, நல்ல தரமான கால்நடை தீவனத்தை பெறுவதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.