'சுப்மான் கில்லை திணிக்கிறாங்க' அகர்கரை கிழித்தெடுத்த அஸ்வின் – என்ன விஷயம்?

India National Cricket Team: மூன்று பார்மட்டுக்கும் மீண்டும் ஒரே கேப்டன் என்ற நிலைக்கு இந்திய அணி திரும்பியிருக்கிறது. தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மாவை தொடர்ந்து மூன்று பார்மட்டுக்கு யார் ஒற்றை ஆளாக தலைமை தாங்க இருக்கிறார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது. பிசிசிஐ தற்போது அதற்கு சொல்லும் ஒரே பெயர் ‘சுப்மான் கில்’ என்பதுதான்… 

Add Zee News as a Preferred Source

ஓடிஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு சுப்மான் கில் (Shubman Gill) கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். டி20ஐ போட்டிகளை பொருதத்வரை வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார். தற்போது துணை கேப்டனாக பொறுப்பு வகிக்கும் கில், டி20 உலகக் கோப்பைக்கு பின் கேப்டன் பொறுப்பை பெறுவார் என நம்பலாம்.

Team India: மூன்றுக்கும் ஒரே கேப்டன் – கம்பீர் சொன்னது என்ன?

தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கும கம்பீரே (Gautam Gambhir), மூன்று பார்மட்டுக்கும் ஒரு கேப்டன்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு எதிரானவர்தான். ஒரு நேர்காணலில் மூன்று பார்மட்டிலும் கேப்டனாக இருந்து, ஐபிஎல் அணியிலும் கேப்டனாக இருந்து, அவற்றில் தொடர்ச்சியாக இயங்குவது எளிதல்ல என கம்பீர் முன்னர் பேசியிருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய தொடருக்கான ஸ்குவாட் அறிவிப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வுக்குழு தலைவர் அகர்கர், இந்த மூன்று பார்மட்டுக்கும் ஒரே கேப்டன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Team India: அகர்கர் சொல்லிய காரணம்

அதில் அகர்கர், “திட்டமிடல் அடிப்படையில், மூன்று பார்மட்டுகளுக்கு மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. நிச்சயமாக, ஒரு கட்டத்தில், அடுத்த உலகக் கோப்பை குறித்து நீங்கள் யோசிக்க தொடங்க வேண்டும்” என்றார். “வரவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்காக நிச்சயமாக நாங்கள் திட்டமிடத் தொடங்குவோம். புதிதாக கேப்டனாக வரும் வீரருக்கு உலகக் கோப்பைக்கு முன் போதுமான போட்டிகளை விளையாடுவதற்கான நேரத்தை இது வழங்குகிறது. மேலும் மூன்று பார்மட்டுகளுக்கும், மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தேர்வாளர்களுக்கு என்றில்லை மிக முக்கியமாக, பயிற்சியாளரைப் பொறுத்தவரை, மூன்று வெவ்வேறு நபர்களுடன் திட்டமிடுவது ஒருபோதும் எளிதானது அல்ல” என அகர்கர் (Agit Agarkar) பேசியிருந்தார்.

Team India: அஸ்வினின் யூ-ட்யூப் வீடியோ

அதாவது, கில்,ரோஹித், சூர்யகுமார் (Suryakumar Yadav) என மூன்று பேரிடமும், தலைமை பயிற்சியாளர் கம்பீர் தனித்தனியாக திட்டம் வகுக்க முடியாது. ஆனால், மூன்று பார்மட்டுகளிலும் விளையாடும் கில்லை கேப்டனாக நியமிப்பது கம்பீருக்கு எளிதான காரியம் என அகர்கர் சொல்கிறார். அகர்கரின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில், தற்போது முன்னாள் இந்திய அணி நட்சத்திர வீரர் அஸ்வின், அகர்கரின் கூற்றை முற்றிலும் மறுத்தது மட்டுமின்றி இது தவறானது என்றும் பேசியிருக்கிறார். 

ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தனது யூ-ட்யூப் சேனலில் நேற்று ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ILT20 மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்காதது குறித்து என சமீபத்திய கிரிக்கெட் நகர்வுகள் பற்றி விரிவாக பேசி நேற்றிரவு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை தமிழக வீரர் கே. விக்னேஷ் தொகுத்து வழங்கினார். அப்போது, மூன்று பார்மட்டுகளிலும் சுப்மான் கில்லை ஒரே கேப்டனாக வளர்த்தெடுக்க என்ற பிசிசிஐ முயற்சிக்கிறதா என விக்னேஷ் கேள்வி எழுப்ப அஸ்வின் அதிரடியான பதிலை அளித்தார்.

Team India: அகர்கரை கிழித்தெடுத்த அஸ்வின்

அஸ்வின் கூறியதாவது, “உங்கள் முகத்தில் கில் தான், கில் தான், கில் தான் திணிக்கிறார்கள். இத்தனை நேரம் பிசிசிஐயின் தொலைநோக்கு முடிவுகள் குறித்து பேசினேன். ஆனால் இது அப்படியில்லை. நீங்கள் (அகர்கர்) சொல்வது போல் மூன்று பார்மட்டுக்கு மூன்று கேப்டன் இருக்கவே முடியாது என்றால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் தலைமை பயிற்சியாளர் வேலையை பார்க்கவே முடியாது. 

உதாரணத்திற்கு, இங்கிலாந்து ஓடிஐ அணிக்கு ஹாரி புரூக் கேப்டனாக செயல்படுவார். டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருக்கிறார். ஹாரி புரூக் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையின் கீழ் விளையாடுவார். அப்படியென்றால், ஸ்டோக்ஸ் – புரூக் இடையே சண்டையாக வருமா? பென் ஸ்டோக்ஸ் – மெக்கலம் – ஹாரி புரூக்கிற்கு சண்டை வருமா?. வராது அல்லவா…

அணை கட்டலாம், ஆனால் அணை கட்ட நிறைய தண்ணீர் இருந்தால் நல்லா இருக்கும். இந்த (மூன்று பார்மட்டுகளுக்கும் மூன்று கேப்டன்கள் சாத்தியமில்லை) என்ற வாதத்தை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன், அது தவறான வாதம் என்பேன். ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் தங்களின் கேப்டன்ஸி திறன்களை வெளிக்காட்டுவதற்கான தகுந்த வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். இதனால்தான் முன்னரே சொல்லியிருந்தேன், கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு என்ன அளவுகோளை வைத்திருக்கிறீர்கள்? என்ன நேர்காணல் வைக்கிறீர்கள்?. 
மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கேப்டன்ஸி என்பதே அதிகாரமோ அல்லது விற்பனை செய்யப்படுவதோ அல்ல, அது ஒரு பொறுப்பு” என்றார்.

மேலும் படிக்க | என்னைய பஸ்ல ஏத்தல.. இதனாலதான் ரோகித் அப்படி செய்தார்.. மனம் திறந்த ஜெய்ஸ்வால்!

மேலும் படிக்க | 20 கிலோ எடை குறைத்து ஆளே மாறிய ரோகித் சர்மா.. மெகா பிளான் போடும் ஹிட்மேன்!

மேலும் படிக்க | தோனி திறக்கும் மதுரை மைதானம்… அடுத்த வருடமே ஐபிஎல் நடக்குமா?

 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.