மும்பை,
நாட்டின் முக்கிய பண்டிகை தீபாவளி உள்ளது. இதனிடையே நடப்பு ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு, புத்தாடைகள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, இந்தியாவில் சீன பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்க மத்திய , மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஹவசேவா துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து பட்டாசுகள் கடத்தி கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசாருடன் விரைந்து சென்ற அதிகாரிகள் துறைமுகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
அதில் அங்கு கண்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மெட்ரிக் டன் சீன பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சீன பட்டாசுகளின் மதிப்பு 6 கோடியே 32 லட்ச ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.