மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.
படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.

`கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார் ரஜிஷா விஜயன். படத்தின் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனை சந்தித்து பேசினோம்.
அனுபமா பரமேஸ்வரன் நம்மிடம் பேசுகையில், “இது என்னுடைய கரியரில் முக்கியமான ஒரு திரைப்படம். இதுவரை நான் பண்ணிய படங்களில் இந்தப் படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்தப் படத்தின் மூலமாக நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். சவால்களும் இருந்தன.
மாரி செல்வராஜ் நேர்த்தியான நடிப்பை எதிர்பார்ப்பார். ஆனால், இப்படியான கடின சூழல்களில் என்னுடன் துருவும், ரஜிஷாவும் இருந்தார்கள்.
தொடக்கத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. நானும் ரஜிஷாவும் ஒரு ஷாட்டில் 52 டேக் எடுத்தோம். நான் மாரி செல்வராஜ் சாரின் படங்களின் மிகப்பெரிய ரசிகை.

அவருடைய படத்தில் நாம் ரசித்துப் பார்த்த அவுட்புட்டைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது புரிந்தது.
ஆனால், இந்த விஷயங்கள் ஒரு முழுமையான திருப்தி உணர்வையும் தந்தன என்று சொல்லலாம். அவர் டேக் ஓகே சொன்னாலே எங்களுக்கு விருது கிடைத்த மாதிரியான உணர்வு வரும்.
படத்தின் எடிட் நடந்து கொண்டிருக்கும்போது மாரி சார் `உனக்கு ஏன் இப்படியான படங்கள் வரவில்லை? உன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை’ என்று சொன்னது மிகப்பெரிய பாராட்டு.
நான் இதுவரை இது மாதிரியான படங்களில் நடித்தது கிடையாது. ஷூட்டிங்கில் இப்படியான ஒரு வார்த்தையை மாரி செல்வராஜ் சார் சொன்னது மிகப்பெரிய விஷயம்.” என்று முடித்துக் கொண்டார்.