மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.
படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.

`கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார் ரஜிஷா விஜயன். அவரை சந்தித்து பேசினோம்…
ரஜிஷா விஜயன் பேசுகையில், `கர்ணன்’ படத்திலும் எனக்கு இருந்த ப்ராசஸ் தான் `பைசன்’ படத்திலும் இருந்தது. இரண்டாவது முறையாக மாரி செல்வராஜ் சாருடன் இணைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.
மற்றவர்களைவிட இந்தப் படத்தில் நான்தான் சீனியர் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இரண்டாவது நாளில் நானே அழுதுவிட்டேன் (சிரிக்கிறார்).
இப்படியான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால், இதற்கு முன் நான் கர்ணனில் செய்த திரௌபதி கதாபாத்திரத்தின் தன்மை இதில் வந்துவிடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தேன்.

இப்படத்திற்காக நான் சைக்கிள் ஓட்டப் பழகினேன். நீருக்குள் இறங்கி நத்தை எடுத்தோம். மட்டன் வெட்டிப் பழகினோம். திரையில் அத்தனையும் அசல் வடிவத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சிகளை மேற்கொண்டோம்.” என்றவரிடம் தென்மாவட்டங்களில் உணவுப் பண்டங்கள் மிகவும் பேமஸ். எந்த பண்டங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தன” எனக் கேள்வி எழுப்பினோம்.
அவர், “ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு எனக்குப் பிடிக்கும். அதைத் தாண்டி பசுபதி சார் வாங்கிக் கொடுத்த தூத்துக்குடி மக்ரூனும் எனக்குப் பிடித்திருந்தது.” என்றார்.