ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலையில் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாகவுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ரவுடி நாகேந்திரன் சமீபத்தில் உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதேபோல இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த சிவா, சதீஷ் ஆகியோருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் சிவா, சதீஷுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் தனது கணவர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதால் வழக்கு விசாரணை நீர்த்துப் போய்விடும் என்றும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.