புதுடெல்லி: அடுத்த மாதம் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் ஐக்கிய ஜனதா தளத்தின் நிறுவனரும், தற்போதைய பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார், மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுவாரா என்பது குறித்து மத்திய அமைச்சர் ஜெய் ஷா விளக்கம் தந்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6, 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 101, லோக் ஜனசக்தி – ராம்விலாஸ் (எல்ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 6 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது: “பிஹார் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார்தான் முதல்வரா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நிதிஷ் தலைமையில் போட்டியிடுகிறது என்பதை மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியும். தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி பேசி அதை முடிவு செய்வார்கள்.
கடந்த 2020 தேர்தல் முடிவுக்கு பிறகு நிதிஷ், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டார். அதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள காரணத்தால் பாஜகவில் இருந்து ஒருவரை முதல்வராக தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும் என தெரிவித்தார். இருப்பினும் அவரது அனுபவம் மற்றும் அவருக்கு உள்ள செல்வாக்கு, மரியாதையை கருத்தில் கொண்டு எங்கள் கூட்டணியின் முதல்வராக அவரை தேர்வு செய்தோம். பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை கண்ட மக்கள், மீண்டும் அந்த கட்சியை ஆட்சியில் அமர வைக்க மாட்டார்கள்” என்றார்.