சென்னை: ஆம்னி பேருந்து கட்டணத்தை காலம் கடந்து குறைப்பதால் என்ன பயன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பிஉள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலை தளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தீபாவளியை முன்னிட்டு தலைநகரிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நான்கு மடங்காக உள்ளதை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பியவுடன், காலங்கடந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது திமுக அரசு.
இதனால் யாருக்கு என்ன பயன்? போதிய அரசுப் பேருந்துகள் இல்லாததால், கூடுதல் கட்டணம் என்று அறிந்தும், வேறு வழியின்றி ஒரு மாதத்துக்கு முன்பே ஆம்னி பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்குத் தற்போது இழப்பீடு வழங்க முடியுமா? ஒவ்வொரு பண்டிகையின்போதும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், ஒருமுறைகூட முன்னரே திட்டமிட்டுத் தானாக முன்வந்து கட்டணத்தை நெறிப்படுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.