பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம்கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டப்பட்டு வருகிறது. இதில், மதுபன் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளராக அந்த தொகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகி மதன் ஷாவுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிட மதன் ஷாவுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த மதன் ஷா இன்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். லாலு பிரசாத்தின் வீட்டின் முன் கண்ணீர் விட்டு அழுதவாறு, தனது சட்டையை கிழித்துக்கொண்டு தரையில் புரண்டு மதன்ஷா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மேலும், ரூ. 2.7 கோடி தந்ததால்தான் மதுபன் தொகுதிக்கான சீட் வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவர் சஞ்சய் தன்னிடம் கூறியதாகவும், பணம் கொடுக்காதத்தால் சீட் வெறொருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் மதன் ஷா குற்றஞ்சாட்டினார். இந்த சம்பவம் பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.