ஷமி – அகர்கர் இடையே என்ன நடந்தது.. அஸ்வின் விளக்கம்!

இந்திய வேகப்பந்து ஜாம்பவன் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் இந்தியாவை ஃபைனலுக்கு எழுப்பிய அவர், பின்னர் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாக பல மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார்.  

Add Zee News as a Preferred Source

காயம் – ஓய்வு – மறுமலர்ச்சி

உலகக் கோப்பை முடிந்ததும், ஷமி முழுமையான ஃபிட்னஸுக்காக நீண்ட கால புனர்வாழ்வு (Rehab) மேற்கொண்டார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவிர்க்க வேண்டியது அவசியமானது. ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் திறமையாக மீண்டும் களமிறங்கி, இந்தியா கோப்பையை வெல்ல மிகப் பெரிய பங்களிப்பு செய்தார்.  

அதன் பின்னர் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான அணித் தேர்வில் ஷமி சேர்க்கப்படவில்லை. “முழுமையான ஃபிட்னஸுக்காக இன்னும் காத்திருக்கிறார்” என்பதே தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அளித்த விளக்கம்.  

ஷமி கேள்வி

இதற்கிடையில் ரஞ்சிக் கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடிய ஷமி, உத்தரகாண்டு அணியை எதிர்கொண்டு 7 விக்கெட்டுகள் எடுத்து அணி வெற்றிக்கு வழிவகுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது, “நான் ரஞ்சியில் 11 மெய்டன் உட்பட 7 விக்கெட்டுகள் எடுத்து வெற்றி பெற்றுள்ளேன். இதைவிட ஃபிட்னஸ் சான்று வேறு என்ன தேவை? ரஞ்சியில் விளையாடுகிற எனக்கு ஒருநாள் அணியில் இடமில்லை என்றால் அதற்கு காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.  

அகர்கரின் பதில்

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அஜித் அகர்கர், “ஷமி உண்மையில் முழுமையாக ஃபிட்டாக இருந்திருந்தால், இந்நேரம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற அணியுடன் நிச்சயம் இருந்திருப்பார்” எனக் குறிப்பிட்டார். இதற்கு எதிராக ஷமி, “என்னுடைய செயல்திறன் எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்போது, இன்னும் என்ன சோதனை தேவை?” என மீண்டும் வலுவாகச் சொன்னார்.  

அஸ்வின் ஆதங்கம்: “மறைமுக பேச்சால் தான் பிரச்சனை”

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார். “இந்திய கிரிக்கெட்டில் பல விஷயங்கள் மறைமுக பேச்சுவார்த்தைகளாகதான் நடக்கின்றன. இது முற்றிலும் மாற வேண்டும். வீரர்களுக்கும் தேர்வுக்குழுவுக்கும் வெளிப்படையான தொடர்பு மிகவும் அவசியம். இல்லையெனில் சின்ன விஷயமே பின்னர் பெரிய பிரச்சனையாகி விடுகிறது,” என்றார்.  

அவர் மேலும் கூறினார்:  

“ஷமியின் நிலை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் வெளியில் சென்று பேட்டி அளித்தது தவறு இல்லை. ஆனால் அவர் ஏன் ஊடகங்களை நாடினார் என்றால், தேர்வுக்குழுவில் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை. அஜித் அகர்கர் அவரிடம் விரைவில் பேசுவார் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.  

வீரர்கள் மற்றும் தேர்வுக்குழுவுக்கு இடையிலான உறவில் வெளிப்படைத்தன்மை தேவை

இந்நிலைமை, இந்திய கிரிக்கெட்டில் வீரர்கள் மற்றும் நிர்வாகம் இடையே இன்னும் வெளிப்படைத்தன்மைக்கும் நேர்மைக்கும் தேவை இருப்பதை வெளிப்படுத்துகிறது. ஷமி போன்ற அனுபவமிக்க வீரர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் போது, அவற்றை விமர்சனம் செய்வதைவிட, பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் அணுக வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.  

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.