பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியை சேர்ந்த விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

என்டிஏ கூட்டணியில் கடந்த 12-ம் தேதி தொகுதிப் பங்கீடு சுமுகமாக இறுதி செய்யப்பட்டது. ஆனால், மெகா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், விஐபி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்-எம்எல், தேசிய மகா சபா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இரு கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆர்ஜேடி சார்பில் 143, காங்கிரஸ் சார்பில் 61, இந்திய கம்யூனிஸ்ட்-எம்எல் சார்பில் 20, விஐபி சார்பில் 15, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 9, மார்க்சிஸ்ட் சார்பில் 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் மெகா கூட்டணி தலைவர்கள் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்: மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ். அவரே கூட்டணியை வழிநடத்துவார். விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானியை துணை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம். பிஹாரில் மெகா கூட்டணி ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரும் துணை முதல்வராக நியமிக்கப்படுவார்.

ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ்: பிஹாரில் கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கியஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 11 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால், பிஹார் மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. எங்களது மெகா கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளோம். இதேபோல என்டிஏ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா? அந்த கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமார் ஓரம்கட்டப்படுகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது. வரும் 28-ம் தேதி மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.