ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் பரிதாபம்: பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கர்னூல் மாவட்டம் 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்னடேக்கூரு என்ற இடத்தில் முன்னால் சென்ற பைக் மீது பேருந்து வேகமாக மோதியுள்ளது. இதில், பைக்கை ஓட்டிச் சென்ற கர்னூல் பிரஜா நகரைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். ஆனால், பேருந்தின் அடியில் பைக் சிக்கிக்கொண்டது.

ஓட்டுநர் இதை கவனிக்காமல் சுமார் 350 மீட்டர் வரை பேருந்தைஓட்டிச் சென்றுள்ளார். அதற்குள், பேருந்தின் அடியில் சிக்கிய பைக் முற்றிலுமாக நசுங்கி உருக்குலைந்தது. இதனால், பைக்கின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்தது. பேருந்தின் டீசல் டேங்கில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியது. அதிகாலை வேளை என்பதால் அனைத்து பயணிகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதில், கீழ் படுக்கை வரிசையில் தூங்கியவர்கள் மட்டும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து தப்பினர். மேல் வரிசையில் தூங்கியவர்கள் சுதாரித்து எழுந்து கீழே இறங்குவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியுள்ளது. இதில், பேருந்தில் இருந்த 2 சிறுவர்கள் உட்பட 20 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

பேருந்தில் 2 ஓட்டுநர்கள் இருந்த நிலையில், ஒருவர் கீழே குதித்து தப்பி தலைமறைவாகிவிட்டார். மற்றொருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, தகவல் அறிந்து, கர்னூல் போலீஸார், தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ்களில் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.பலர் இருக்கைகளில் அமர்ந்தநிலையிலேயே எரிந்து உயிரிழந்துள்ளனர். முழுவதுமாக எரிந்துஎலும்புக் கூடாக மாறியவர்களை அடையாளம் காண முடியவில்லை. இதனால், சம்பவ இடத்திலேயே கூடாரம் அமைத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த விபத்தில் 27 பேர் உயிர்தப்பியுள்ளனர். 12 பேர் காயங்களுடன் கர்னூல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, பேருந்தைஅப்புறப்படுத்த வரவழைக்கப்பட்ட கிரேன் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த கிரேன் ஓட்டுநரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த பொறியாளர்கள்: ஆந்திர மாநிலம் பாபட்லாவை சேர்ந்தவர் தாத்ரி. தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டத்தை சேர்ந்தவர் அனுஷா ரெட்டி. இருவரும் பெங்களூருவில் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். ஹைதராபாத்தில் உள்ள பெரியப்பா வீட்டில் தீபாவளி கொண்டாடிய தாத்ரியும், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அனுஷாவும் பெங்களூரு திரும்புவதற்காக இந்த சொகுசுப் பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்தில் மேல் வரிசையில் படுத்திருந்த இருவரும் தீப்பிடித்த பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

உயிரிழந்த பொறியாளர்கள் தாத்ரி, அனுஷா ரெட்டி.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகமுதல்வர் சித்தராமய்யா இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரு.50 ஆயிரமும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்களும், அவரவர் மாநிலங்களை சேர்ந்தவர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி உதவி அறிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.