சென்னை: விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரிப் பாசன மாவட்டங்களில் போதிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் 15 லட்சம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன். அப்போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், விவசாயிகளின் கண்ணீரை தடுத்திருக்க முடியும்.
கடந்த சில நாள்களாக பெய்தமழையால் காவிரிப் பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.