Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? வானிலை அறிக்கை விவரம் | Live Update

தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் அக்டோபர் 25, 26 தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

குறிப்பாக, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அக்டோபர் 27-ம் தேதி காலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புயலானது ஆந்திரா நோக்கி சென்றாலும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மழை
மழை

மேலும், அக்டோபர் 25 முதல் 27 வரையில் 3 நாள்களுக்கான கனமழை எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், இன்று விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையிலும், நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையிலும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை வெளியான வானிலை அறிக்கையின்படி காலை 10 மணி வரைக்குமான கணிப்பின்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மழை குறித்த அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.