சென்னை: டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் ரயில்களில் விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுபோல, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளும் முடிந்து விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 60 நாட்களுக்கு முன்பு ரயில்களில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், டிச.23, 24-ம் தேதிகளில் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் கடந்த 2 நாட்களாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, பாண்டியன், மலைக்கோட்டை உள்ளிட்ட விரைவு ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளுக்கான முன்பதிவு முடிந்தது. இதன்பிறகு, அடுத்த 30 நிமிடங்களில் ‘ஏசி’ பெட்டிகளிலும் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.
இருப்பினும், வந்தே பாரத், தேஜஸ், வைகை, குருவாயூர் உள்ளிட்ட விரைவு ரயில்களில் மட்டும் கணிசமாக டிக்கெட்டுகள் இருந்தன. இதேபோல, கோவை தடத்தில் செல்லும் வந்தேபாரத் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களிலும் கணிசமான டிக்கெட் இருந்தன.