சென்னை: மாநகராட்சி சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்களில் மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்கும், சாலைகளில் மிதக்கும் கழிவுகள் வடிகால்களில் நுழைவதை தடுப்பதற்கும், வண்டல் மண் சேகரிக்கவும் மழைநீர் வடிகால்களில் 5 மீட்டர் இடைவெளியில் 1,03,166 வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் குப்பைகளை அகற்றி முதல்கட்டமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
200 வார்டுகளிலும் வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் தூர்வாரி வண்டல் மண் அகற்றும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.. பருவமழைக் காலம் முழுவதும் தொடர்ந்து இப்பணியை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.