மாஸ்கோ: அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என கூறப்படுகிறது.
ரஷ்யா ‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவுகணையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுடவேண்டாம் என்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளியேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டன.
இதையடுத்து 9எம்730 புரேவெஸ்ட்னிக் என்று அணு சக்தி ஏவுகணையை ரஷ்யா அறிமுகம் செய்தது. இதை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டத்துக்கான ரஷ்யாவின் பதிலடி நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புதின் கூறினார். இந்த ஏவுகணையை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செலுத்த முடியும். இது பறந்து செல்லும் பாதையையும் கணிக்க முடியாது என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஏவுகணையை ரஷ்யா கடந்த 21-ம் தேதி பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கி.மீ தூரம் சென்றதாக ரஷ்ய ராணுவத் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் கூறினார்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து உக்ரைன் போரை நடத்தி வரும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ரஷ்ய அதிபர் புதின் பேசினார். போர்க்கால சீருடை அணிந்து பேசிய அதிபர் புதின், ‘‘இது போன்ற சக்திவாய்ந்த ஏவுகணை உலகில் எந்த நாட்டிடமும் இல்லை. இது போன்ற ஆயுதத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என ரஷ்ய நிபுணர்கள் முன்பு கூறினர். ஆனால் தற்போது, இந்த முக்கிய பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது’’ என பெருமிதத்துடன் கூறினார்.
உக்ரைன் போர் நிறுத்தத்தை கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் ரஷ்யா அணு சக்தி ஏவுகணையை பரிசோதித்துள்ளது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் புதின் விடுக்கும் எச்சரிக்கையாக இது கருதப்படுகிறது.