புதுச்சேரி, முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்த பிரகாஷ், (35). இவர், தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் புதுச்சேரியில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று அந்தத் தொழிலையும் செய்து வந்தார். இவரின் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (35). இவர்கள் இருவரும் 29.10.2025-ம் தேதி புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் வந்தனர். பின்னர் சென்னை அசோக் நகர், 4வது அவென்யூவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மதியம் பிரகாசும் சுகன்யாவும் சாப்பிட்டனர். அப்போது சுகன்யா தன்னுடைய சித்தி மகளான குணசுந்தரிக்கு தான் சென்னை வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தார். உடனே சுகன்யாவை பார்க்க குணசுந்தரியும் அசோக்நகருக்கு சென்றார். பின்னர் சுகன்யாவும் குணசுந்தரியும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். டிரைவர் இருக்கையில் பிரகாஷ் அமர்ந்திருந்தார். அப்போது பைக்கில் சுகன்யாவின் கணவர் தனஞ்செழியன் சம்பவ இடத்துக்கு வந்து பிரகாஷிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். திடீரென பிரகாஷை காருக்குள் வைத்தே சரமாரியாக கத்தியால் வெட்டியிருக்கிறார் தனஞ்செழியன். அதைத் தடுத்த சுகன்யாவுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் கீழே சரிந்ததும் சுகன்யாவை அழைத்துக் கொண்டு தனஞ்செழியனும் அவரின் நண்பர்களும் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த குணசுந்தரியும் அங்கிருந்து தப்பினார். உயிருக்குப் போராடிய பிரகாஷை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து பிரகாஷின் உறவினர்களுக்கு அசோக்நகர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக பிரகாஷின் தந்தை ஆறுமுகம் என்பவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு சென்னை ஜாபர்கான்,பேட்டை பகுதியைச் சேர்ந்த தனஞ்செழியன் (42), அவரின் மனைவி சுகன்யா, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த குணசுந்தரி(27) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, பைக்குகள், செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த கொலை வழக்கு குறித்து அசோக்நகர் போலீஸார் கூறுகையில்,
“இந்த வழக்கில் கைதான சுகன்யாவின் சொந்த ஊர் புதுச்சேரி. இவரும் கொலை செய்யப்பட்ட பிரகாசும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அதனால் இருவரும் பழகி வந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் சுகன்யாவுக்கும் தனஞ்செழியனும் திருமணம் நடந்திருக்கிறது. அதைப் போல பிரகாசுக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில்தான் தனஞ்செழியனுக்கும் சுகன்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சுகன்யா மீண்டும் புதுச்சேரிக்கு சென்றிருக்கிறார். அங்கு பிரகாஷ் நடத்தி வரும் நிறுவனத்தில் சுகன்யா வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது பிரகாஷ் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு அவரின் மனைவியும் பிரிந்துச் சென்றுவிட்டார். இதையடுத்து சுகன்யாவும் பிரகாசும் நெருங்கி பழகி வந்திருக்கிறார்கள். இந்நிலையில், சுகன்யாவின் சித்தி மகளான குணசுந்தரியிடம் சுகன்யா அடிக்கடி பேசி வந்திருக்கிறார்கள். பிரகாசும் சுகன்யாவும் சென்னை வந்த நிலையில் குணசுந்தரியைச் சந்தித்து பேசியபோதுதான் குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு தகவலைத் தெரிவித்து அங்கு வரவழைத்திருக்கிறார். அப்போதுதான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்காக குணசுந்தரியையும் சுகன்யாவையும் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்”என்றனர்.

இந்த வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸார் கூறுகையில், “இந்த வழக்கில் கைதான குணசுந்தரியிடம் விசாரித்தபோது தன்னுடைய மாமா தனஞ்செழியனும் அக்காள் சுகன்யாவும் சேர்ந்து வாழ விரும்பினேன். அதுதொடர்பாக சுகன்யாவிடமும் தனஞ்செழியனிடமும் பேசி வந்தேன். இந்தச் சமயத்தில் இருவரும் நேரில் சந்தித்தால் மனமாறி விடுவார்கள் என நம்பிதான் சுகன்யா அக்கா சென்னை வந்த தகவலை தனஞ்செழியன் மாமாவிடம் தெரிவித்தேன். அவர் செய்த கொலையில் நானும் சிக்கிக் கொண்டேன் என்று பரிதாபமாக கூறியிருக்கிறார். கைதான தனஞ்செழியன், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார்” என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “பிரகாஷை தனஞ்செழியன் கொலை செய்ததும் குணசுந்தரியாவது, சுகன்யாவது காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் தப்பி ஓடியிருக்கிறார்கள். தனஞ்செழியனை சம்பவ இடத்துக்கு குணசுந்தரிதான் வரவழைத்திருக்கிறார். அதோடு பிரகாஷ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் தனஞ்செழியனோடு சுகன்யா தப்பிச் சென்றிருக்கிறார். அதனால்தான் சுகன்யாவையும் குணசுந்தரியையும் இந்த வழக்கில் கைது செய்திருக்கிறோம்” என்றார்.