புதுடெல்லி,
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறார். ஜப்பான், தென்கொரியா நாடுகளில் சமீபத்தில் பேசும்போதும், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்துக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பதை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. ஜப்பான், தென்கொரியாவில் டிரம்ப் பேசியது குறித்த வீடியோ பதிவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறுகையில், ‘இது ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு தென்கொரியாவில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது.
முன்பை விட அதிக விபரம் உள்ளது. ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக 56-வது முறையாக கூறியிருக்கிறார். ஆனால் தனக்குத்தானே கூறியிருந்த அதேநேரம் இப்போது முற்றிலும் சுருங்கிப்போன 56 அங்குல மார்பு இன்னும் அமைதியாக இருக்கிறது’ என சாடியிருந்தார்.