கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இன்று நவிமும்பையை நோக்கி திரும்பியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை சுமந்து, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத இரு அணிகளும், முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை முத்தமிட வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் களமிறங்குவதால், இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
The #Final frontier!
DY Patil Stadium
3:00 PM IST
ps://t.co/EbzsAv1VwI
Official BCCI App
All the best #TeamIndia WomenInBlue | #CWC25 | #INDvSA pic.twitter.com/rLeqQtlF7R
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025
அரையிறுதியில் அரங்கேறிய அற்புதம்
இந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றுகளில் இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனேயே அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், அரையிறுதியில் கிரிக்கெட் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, உலக சாதனை இலக்கான 339 ரன்களை வெற்றிகரமாக துரத்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரின் அபாரமான ஆட்டம், இந்திய அணிக்கு நம்பிக்கையின் உச்சத்தை அளித்துள்ளது. இந்த வெற்றியின் ஆக்ரோஷம், இறுதி போட்டியிலும் தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பேட்டிங் பலம், பந்துவீச்சில் கவனம் தேவை
இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக அதன் பேட்டிங் வரிசை திகழ்கிறது. ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் என அதிரடிக்கு பஞ்சமில்லாத நட்சத்திர பட்டாளம் அணிக்கு வலு சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, ராதா யாதவ் மற்றும் ஸ்ரீசரணி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், அணியின் வேகப்பந்துவீச்சு சற்று பலவீனமாக இருப்பது ஒரு சிறிய கவலையாகப் பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில், பந்துவீச்சாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.
எதிரணியை குறைத்து மதிப்பிட முடியாது
இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்டாலும், தென்னாப்பிரிக்க அணியை சாதாரணமாக எடைபோட முடியாது. லீக் சுற்றுகளில் இங்கிலாந்துக்கு எதிராக 69 ரன்களுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 ரன்களுக்கும் சுருண்ட தென்னாப்பிரிக்கா, யாரும் எதிர்பாராத வகையில் அரையிறுதியில் நான்கு முறை சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்குள்ள மைதானங்களின் தன்மையை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
மேலும், அந்த அணியின் கேப்டன் லாரா உல்வார்ட், இந்தியாவுக்கு எதிராக சிறந்த பேட்டிங் சராசரியை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. அனுபவ வீராங்கனை மரிசேன் கேப் மற்றும் நேடின் டி கிளர்க் போன்றோரின் ஆட்டமும் இந்தியாவிற்கு சவாலாக அமையலாம். உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியாவிற்கு எதிராக ஆடிய கடைசி மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவே வெற்றி பெற்றுள்ளது. அந்த தோல்விகளுக்குப் பழிதீர்க்க இந்திய அணிக்கு இது ஒரு சரியான தருணம்.
கோப்பையோடு விடைபெறுவாரா ஹர்மன்?
சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு பெரும் பலமாகும். மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க முடிவு செய்துள்ளதாக வெளியாகும் தகவல்கள், வீராங்கனைகளுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. 36 வயதாகும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் கடைசி உலக கோப்பை தொடர் இதுவாக இருக்கலாம் என்பதால், கோப்பையுடன் அவருக்கு பிரியாவிடை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கனவாக உள்ளது. இந்த அரிய வாய்ப்பை இரு அணிகளும் நழுவவிடாது என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
About the Author
RK Spark