சென்னை: கல்லறைத் திருநாளைஒட்டி சென்னையில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனையும், கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. கல்லறைத் தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று இறந்த உறவினர்களுக்காக ஜெபம் செய்தனர். கிறிஸ்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் நவ.2-ம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். இந்நாள் கல்லறைத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
கல்லறைத் திருநாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் இறந்த உறவினர்கள், பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் நண்பர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தப்படுத்தி, வண்ணம் தீட்டி குடும்பத்தோடு சென்று ஜெபம் செய்வது வழக்கம். அது மட்டுமின்றி இறந்தோருக்கு பிடித்தமான உணவுகளை அவர்களின் நினைவாக ஏழை எளியவர்களுக்கு வழங்குவார்கள். மேலும் கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு ஆராதனை மற்றும்சிறப்பு வழிபாடும் நடைபெறும்.
அந்த வகையில் நேற்று கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று காலை மற்றும் மாலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க ஆலயங்களில், இறந்தோர் நினைவாக சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆலயங்களுக்கு உட்பட்ட கல்லறைத் தோட்டங்களுக்கு பாதிரியார்கள் சென்று இறந்தவர்களுக்காக ஜெபம் செய்தனர். அங்குள்ள கல்லறைகளை புனிதநீர் கொண்டு தெளித்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரேயுள்ள மிகவும் பழமை வாய்ந்த செயின்ட் மேரீஸ் கல்லறைத் தோட்டம், செயின்ட் பேட்ரிக் கல்லறைத் தோட்டம், கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம், சாந்தோம் கியூபிள் ஐலேண்ட் கல்லறைத் தோட்டம், காசிமேடு கல்லறைத் தோட்டம் உள்ளிட்ட கல்லறைத் தோட்டங்களில் நேற்று காலை 7 மணிமுதல் மாலை வரை ஏராளமான கிறிஸ் தவர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்தனர். மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தோருக்காக ஜெபம் செய்தனர். மேலும், ஏழை எளியவர்களுக்கு உணவுப் பண்டங்கள், ஆடைகள் வழங்கினர்.