புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ‘வாக்காளர்களிடையே காணப்படும் உற்சாகம், தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று இரண்டு பேரணிகளில் உரையாற்ற உள்ளார். அராரியா மாவட்டத்தின் ஃபோர்ப்ஸ்கஞ்சில் நடைபெறும் பொதுக் கூட்டம் மற்றும் பகல்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிஹாரில் நடைபெறும் ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழா மக்களிடையே அற்புதமான உற்சாகத்தைக் காண்கிறது. இது சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. இந்த உற்சாகமான சூழ்நிலையில், அராரியாவின் ஃபோர்ப்ஸ்கஞ்சில் காலை 11:30 மணியளவில் மற்றும் பகல்பூரில் பிற்பகல் 1:30 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் எனது குடும்ப உறுப்பினர்களின் ஆசீர்வாதங்களைப் பெற ஆவலாக உள்ளேன்’ என்று தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 3.75 கோடி. மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன