பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகள் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இரு அணிகளை தவிர்த்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. பிஹார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மெகா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் 16 அமைச்சர்கள் விஐபி வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்தம் 3.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தலைநகர் பாட்னா அடுத்த பக்தியார்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் நிதிஷ் குமார் வாக்களித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் தனது மனைவி ரப்ரி தேவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று பாட்னாவின் கால்நடை மருத்துவக் கல்லூரி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். ஆர்ஜேடி மூத்த தலைவரும், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தனது மனைவி ராஜஸ்ரீ உடன் சென்று வாக்களித்தார்.
லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகிஜன் சக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். பாட்னாவில் வாக்களித்த அவர், ‘‘எனக்கு முதல்வர் பதவி கிடைத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்’’ என்றார். பிஹார் தேர்தலில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பும், இளைய மகன் தேஜஸ்வி யாதவும் எதிரும் புதிருமாக போட்டியிடுகின்றனர். ‘‘எனது இரு மகன்களும் தேர்தலில் வெற்றிவாகை சூடுவார்கள்” என்று லாலுவின் மனைவி ரப்ரி தேவி கூறினார்.
மத்திய அமைச்சரும், எல்ஜேபி (ஆர்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான், ககாரியா நகரில் வாக்களித்தார். ‘‘பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். மெகா கூட்டணி தோல்வியை தழுவும்’’ என்று அவர் கூறினார்.
புர்காவால் பதற்றம்: கோரியாகோட்டி தொகுதியில் பாஜக சார்பில் தேவேஸ்கந்த் சிங் போட்டியிடுகிறார். சிவான் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு அவர் நேற்று சென்றார். அப்போது, முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து வாக்களிக்க சென்றனர். அவர்களது முக அடையாளத்தை உறுதி செய்வதற்காக, புர்காவை நீக்குமாறு தேவேஸ்கந்த் சிங் வலியுறுத்தினார்.
இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு தரப்பினர் வாக்குச்சாவடி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறிய போது, ‘‘விமான நிலையங்களில் முஸ்லிம் பெண்களின் புர்கா நீக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல வாக்குச்சாவடியிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதை எதிர்ப்பது சட்டவிரோதம்’’ என்றார்.
கல்வீச்சு தாக்குதல்: வைஷாலி பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், ஆர்ஜேடி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஆர்ஜேடி தொண்டர்கள் கற்களை வீசிதாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதேபோல போஜ்பூர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர். மாஞ்சி தொகுதியின் ஜெய்ட்பூர் பகுதியில் ஆய்வு செய்த இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும், வேட்பாளருமான சத்யேந்திர குமாரின் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர்.
பெரும்பாலான பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நீடித்தது. பதற்றமான 56வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிந்தது. 400 வாக்குச்சாவடிகளில் இரவை கடந்தும் வாக்குப்பதிவு நீடித்தது. இரவு 8 மணி நிலவரப்படி, 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2020-ல் முதல் கட்ட தேர்தலின்போது 56.9 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைவிட தற்போது 7.56 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.நவ.11-ல் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.