“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “ திமுகவின் 75 ஆண்டுகள் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவுக்கு, “அறிவுத் திருவிழா” என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும் என்று அவருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.

முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ‘ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்’ என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை.

கழகத்தின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள். சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலத்தில், குக்கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் சலூன் கூட மக்களின் சிந்தனையைத் திருத்தும் மையமாக செயல்பட்டது.

சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல், திராவிட இயக்க இதழ்களை ஒரு திமுககாரர் வாசிக்க, அவரைச் சுற்றி பத்து பேர் செவி வழியாகக் கேட்டு உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டார்கள். கிராமத்தில் இருக்கிறவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தார்கள். ரஷ்யப் புரட்சியைப் பற்றி படித்து, ஊக்கமும் உறுதியும் பெற்றார்கள். இவ்வாறு நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை.

இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுகவைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். திமுகவைப் போன்று வெற்றி பெற, திமுகவைப் போன்று உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன். ஒரு சந்திரன். ஒரு திமுக தான். இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது.

இந்த வரலாற்றையும் – நம்முடைய கொள்கைகளையும் – உதயநிதி இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததால்தான், இளைஞரணிச் செயலாளராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து, லட்சக்கணக்கான இளைஞர்களை கழகத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும், “காலத்தின் நிறம் – கருப்பு சிவப்பு” புத்தகத் தலைப்பிலேயே, நம்முடைய இயக்கம் எத்தகைய மாபெரும் அறிவுக் கரூவூலமாக – கொள்கை தீரர்களின் கோட்டமாக இருக்கிறது என்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், இளைஞரணியினருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்… இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை, காலத்திற்கு ஏற்ற மாதிரி, வீடியோக்களாக மாற்றி, சோஷியல் மீடியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்!

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், சோனியா காந்தி முதல் – அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும், தங்கள் பார்வையில் நம்மை அளவிட்டு எழுதியிருக்கிறார்கள். ஒரு மாநிலக் கட்சியை, அகில இந்தியத் தலைவர்களும், மற்ற மாநிலத் தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடந்துவிடாது.

இப்படி, இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது. இந்தச் சாதனைகளும் – வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது. நாம் பேசும், சமூகநீதி – சுயமரியாதை – மாநில சுயாட்சி – கூட்டாட்சி – ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது! “என்னடா இவர்களைத் தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள்.

எனவே, நான் பெருமையுடன் சொல்கிறேன். இந்த அறிவுத் திருவிழா, “திராவிடம் வெல்லும், அதைக் காலம் சொல்லும்!” என்று முழங்கும் திருவிழா.

இங்கு இருக்கும் இளைஞரணித் தம்பிமார்களைப் பார்க்கிறபோது, இது கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், காலந்தோறும் கொள்கைகளைக் கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால்தான், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும் – எத்தனை பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை என்று உணர்த்துகிறது. கொள்கை ரீதியாகத் திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார்.

ஏன் இந்த சாரை அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லியும், ஏன் நடத்த வேண்டும்? இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல், தேர்தல் ஆணையம் சார் பணிகளை தொடங்கிவிட்டார்கள். இதற்கு எதிராகச் சட்டரீதியாகவும் – அரசியல்ரீதியாகவும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம், தொடர்ந்து போராடப் போகிறோம், போராடுவோம், அது வேறு!

இந்த நேரத்தில், இளைஞரணியிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, களத்தில் வேலை செய்யும் நீங்கள், எந்தவொரு போலி வாக்காளரும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகக் களப்பணியாற்ற வேண்டும்.

நம் இயக்க வரலாறு முழுவதுமே போராட்ட வரலாறுதான். நம்முடைய போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கொள்கைத் திருவிழாதான், இந்த அறிவுத் திருவிழா. முற்போக்கு விழாவாக, கருப்பு – சிவப்பு – நீலம் – சேர்ந்திருக்கும்போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது.

இந்தியாவின் ஜனநாயகத்தையும் – தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க – 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-லும் மாபெரும் வெற்றியைப் பெறும்! “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்” பெரியாரின் – அண்ணாவின் – தலைவர் கலைஞரின் – இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் – கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழ்நாடு தலைகுனியாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.