கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கும் ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். திருமணம் முடிந்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முகம்மது ஷமி தன்னை துன்புறுத்துவதாக 2018-ல் ஜஹான் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
விவாகரத்து பெற்ற நிலையில், ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் வழக்கு தொடர்ந்தார். முகம்மது ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான், தனக்கும் தங்கள் மகளுக்கும் வழங்கப்படும் ஜீவனாம்ச தொகையை அதிகரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மாதத்திற்கு ரூ.4 லட்சம் என்பது ஏற்கனவே அதிகம் இல்லையா? என்று கேட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றம், முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இருவரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை அடுத்ததாக டிசம்பரில் நடைபெற உள்ளது.