புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாகவும், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் அக்கட்சி சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சி உள்ளது. இக்கட்சி தலைமையிலான கூட்டணி ஜார்க்கண்ட்டில் ஆட்சியில் உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரண் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
பழங்குடி மக்களின் கட்சியாகக் கருதப்படும் ஜேஎம்எம்-க்கு பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் கனிசமான வாக்கு வங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
எனினும், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இரண்டு எஸ்டி தனித் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த ஜேஎம்எம், ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. அதன் பிறகும் இண்டியா கூட்டணி ஜேஎம்எம்-ஐ பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, போட்டியில் இருந்து விலகும் முடிவை ஜேஎம்எம் எடுத்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கும் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரண், பிஹார் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருப்பதாக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின், இண்டியா கூட்டணியிலிருந்து ஜேஎம்எம் விலகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் அமைச்சரும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சுதிப்ய குமார் கூறுகையில், ‘தேர்தல் போட்டியிலிருந்து ஜேஎம்எம் விலக ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ்தான் காரணம். இந்த கட்சிகளுக்கு ஜார்க்கண்ட் அமைச்சரவையில் நாங்கள் இடமளித்துள்ளோம். இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடனான கூட்டணியை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம். கடந்த முறையும் பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கவில்லை.’ என தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பரில் ஹேமந்த் சோரண் முதல்வராக பதவி ஏற்றார். இவரது ஜேஎம்எம் கட்சி தலைமையில்தான் ஜார்க்கண்ட்டில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது.
ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மெகா கூட்டணியில் ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 4, சிபிஐஎம்எல் 2 மற்றும் ஜேஎல்கேஎம் 1 தொகுதிகளைப் பெற்றுள்ளன.
இங்கு எதிர்கட்சிகளின் கூட்டணியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது. இக்கூட்டணியில் பாஜக 21, ஜேடியு, எல்ஜேபி மற்றும் ஏஜேஎஸ்யு தலா ஒரு தொகுதிகளை பெற்றுள்ளன.
ஜார்க்கண்டில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் விலக்கப்பட்டால், ஜேஎம்எம் கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். ஏனெனில், ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவால்தான் ஜார்க்கண்டில் ஜேஎம்எம் ஆட்சி தொடர்கிறது.
இச்சூழலில், தன் ஆட்சியை தக்க வைக்க ஜேஎம்எம் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தேட வேண்டி இருக்கும். தற்போது வெளியில் இருப்பது எதிர்கட்சியான பாஜக மட்டுமே. எனவே, பாஜகவுடன் ஜேஎம்எம் மீண்டும் கைகோக்கும் வாய்ப்புகள் உருவாகி வருதாகக் கருதப்படுகிறது. ஜார்கண்டில் ஜேஎம்எம்-க்கு 3 எம்பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.