சென்னை,
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
இதனிடையே டிரேடிங் முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யலாம் என்ற விதிமுறையும் இருப்பதினால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை அணிகளுக்கு இடையே தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வீரர்களுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் இந்த முறை ஏலத்தை இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் ஏலத்திற்கு முன்னதாக, 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ. காலக்கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.