மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள, சாதி சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் ‘பைசன்’ படத்தை, அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் பாராட்டி பெரும் வரவேற்பளித்தனர்.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னிப் பிணைந்து உருவாகியிருந்தது ‘பைசன்’.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மாரி செல்வராஜின் சொந்த ஊரான நெல்லை மாவட்ட கிராமங்களிலேயே நடத்தப்பட்டது. சொந்த ஊர் என்பதால், மாரி செல்வராஜின் கிராம மக்கள் படப்பிடிப்பு பணிகளில் இணைந்து பணியாற்றியிருந்தனர்.
தற்போது ‘பைசன்’ படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பின் போது தன்னுடன் உழைத்த கிராம மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், அவர்களுக்கு விருந்தும் வைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ்.
பைசன் (காளமாடன்)படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள்… pic.twitter.com/m03jJBDoj2
— Mari Selvaraj (@mari_selvaraj) November 6, 2025
இதுகுறித்து மாரி செல்வராஜ்,
“பைசன் (காளமாடன்) படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் நேரில் போய் சந்தித்து பைசனுக்கு கிடைத்த இந்த வெற்றியையும் என் இதயம் நிரம்பிய நன்றியையும் அன்பையும் பகிர்ந்து மகிழ்ந்தேன்.
பைசன் காளமாடனின் இந்த அத்துமீறிய வெற்றி இந்த மனிதர்களாலே சாத்தியமானது.’, என்று எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.