ஒண்டாரியா,
ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் பங்கேற்கும் மாநாடு, கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் போது கனடா வெளியுறவுத்துறை மந்திரி அனிதா ஆனந்தை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நடத்தப்பட்ட கார் வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார். மேலும், இந்த துயரமான நேரத்தில் இந்திய மக்களுடன் கனடா துணை நிற்பதாக கூறினார்.
தொடர்ந்து, இரு நாடுகளிடையே எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக, இந்தியா – கனடா இடையேயான சட்ட அமலாக்க ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு பயணம் செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெய்சங்கரின் கனடா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அனிதா ஆனந்த் எக்ஸ் தளபதிவில், “வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளிடையே உள்ள உறவுகளில் ஒத்துழைப்பு” குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.